எங்களுக்கான மார்க்கெட்டிங் இதுதான்!

சென்னையில் உள்ள ஏ எம் ஜெயின் கல்லூரியில் பிபி படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்துவிட்டு பிறகு தனது தந்தை நடத்திவந்த தீனன் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் அடியெடுத்து வைத்தவர் தான் திரு. யுகேஷ் கிருஷ்ணா அவர்களை வளர்தொழில் இதழுக்காக சந்தித்தோம். அவரிடம் பேசியதிலிருந்து, நான் சிறுவயதிலிருந்தே தொழில் முனைவோர் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்ததால் நாமும் ஒரு தொழில்முனைவோராக தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். எனது குடும்பத்தினர் இது நிறைய கடினமான வேலைகள் இருப்பதாக கருதினர். எனது பிடிவாதத்தின் காரணமாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். எனது அப்பா இந்த தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்பாக சைக்கிள் கடை நடத்தி வந்தார். அதன் பிறகு சிறிதாக ஆரம்பிக்கப்பட்டது தான் எலெக்ட்ரிக்கல்ஸ். எங்களிடம் அனைத்து நிகழ்ச்சிகளுக்கு தேவையான லைட் சாமியானா டேபிள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்து தருகிறோம். எங்களது நிறுவனம் ஆரம்பித்து 40 வருடங்கள் ஆகிறது.


சைதாப்பேட்டையில் பெரும்பாலானவர்கள் அவர்களுடைய வீட்டு நிகழ்ச்சிகளுக்கு எங்களிடம் தான் தொடர்பு கொள்வார்கள். ஆரம்ப காலகட்டத்தில் ஜி கே மூப்பனார் அவர்களுடைய கூட்டத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறோம். அது தவிர பல்வேறு அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எங்களது நிறுவனத்திலிருந்து நிகழ்ச்சிகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்திருக்கிறோம். திருமண நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆண்டு விழாக்கள் விளையாட்டு போட்டிகள், கட்சிகளின் நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விழாக்களுக்கும் நாங்கள் ஏற்பாடுகளை செய்து தருகிறோம். பெரும்பாலும் வெளியில் நடக்கின்ற என்ன நிகழ்ச்சி ஆனாலும் அதில் எங்களுடைய பங்களிப்பு இருந்தே தீரும். மேடை அமைப்பதில் இருந்து நிகழ்ச்சியை சிறப்பாக முடித்துத் தருவது வரை சிறப்பாக எங்களது சேவை அமையும். வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்கான தேவை என்ன என்பதை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவோம். எங்களிடம் ஒரு முறை அவர்களுக்கு தேவையானவற்றை உறுதி செய்துவிட்டுச் சென்றாலே போதுமானது. அவர்கள் சொன்ன நேரத்தில் சரியாக அந்த வேலைகளை செய்துவிடுவோம். அப்படி சரியான நேரத்தில் செய்து கொடுப்பதால் வாடிக்கையாளர்களே நாங்கள் பேசிய பணத்தைவிட அதிகமாக தந்துவிட்டு செல்வார்கள். மேலும் அவர்களுடைய உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் எங்களை பரிந்துரை செய்கிறார்கள். எங்களுக்கான மார்க்கெட்டிங் இதுதான்.


எங்களிடம் 12 பேர் இப்போது வேலை பார்க்கிறார்கள். வடமாநில நபர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது. இந்தத் துறையில் மனித வளம் எனப்படுகிற மேன் பவர் தான் மிகவும் இன்றியமையாததாகும். மனித வளம் சரியான நேரத்தில் இல்லை என்றால் நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது. எனவே நாங்கள் எப்போதும் நிறைய நபர்களை அவ்வப்போது வேலைக்காக பயன்படுத்திக் கொள்வதுண்டு.


வேலை செய்துவிட்டு பணம் வாங்குவது தான் மிகவும் சவாலாக உள்ளது. நாங்கள் சேவைத் துறையில் உள்ளதால் ஒரு வேலையை முடித்துவிட்டு திரும்புவதற்குள் அடுத்த வேலை தயாராக இருக்கும் எனவே வேலை வேலை என்று அதன் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. ஒரு சில நேரங்களில் பணத்தை வாங்காமல் விட்டதும் உண்டு. அதுதான் கவனத்தை அதிகமாக இப்போது உறுதியாக இருக்கிறோம். பணத்தைவிட நம்முடைய நிறுவனத்தின் நம்பகத்தன்மையும் பெயரும் தான் பெரிதென கருதுபவர்கள் நாங்கள்.


எனக்கு ஒருவரின் கீழ் பணிபுரிவதற்கு இயல்பாகவே விருப்பம் இல்லாமல் இருந்தது. காரணம் நம்முடைய தொழிலில் நாம் எந்த அளவிற்கு நம்முடைய உழைப்பே செல்கிறோமோ அந்த அளவிற்கு அதிகம் சம்பாதிக்க முடியும். அதற்கு அந்த துறையில் போதிய அனுபவமும் அந்தந்த துறை மீதான தீராத ஆர்வமும் இருக்க வேண்டும். புதிதாக அந்தத்துறையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். மேலும் நாம் தேர்ந்தெடுக்கும் துறையை நேசித்தால் தான் வெற்றி என்பது சாத்தியமாகும் என்பதை என்னுடைய மூன்றாண்டு கால அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்.


ஒரு முறைநான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் ஒவ்வொருவரையும் அவளுடைய அப்பாவின் பெயரையும் அவர்கள் சரிசெய்யும் வேலை பற்றியும்  சொல்ல சொன்னார்கள் நானும் என்னுடைய அப்பா செய்கிற நிகழ்ச்சிகளுக்கு


 தேவையான லைட்டிங் மற்றும் எங்களுடைய தொழில் பற்றி கூறினேன். அப்போது என்னுடைய வகுப்பறையில் இருந்த ஆசிரியர் மற்றும் சில மாணவர்கள் சற்று குறைவாக மதிப்பிட்டு என்னை பார்ப்பதை உணர்ந்தேன். ஓராண்டுக்கு முன்பு அதே பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று அவர்களுக்கு தேவையான பணியை செய்து கொடுத்துவிட்டு அதே ஆசிரியரிடம் சொன்னேன் நான் உங்கள் மாணவன் தான் சார் என்று அவருக்கு பதில் வரவில்லை. நம்முடைய வெற்றி என்பது சொல்லில் இல்லை செயலில் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். இப்போது அந்த பள்ளியின் மொத்த விழாக்களையும் நாங்கள் தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.


சில மண்டபங்களும் அவர்களுடைய வாடிக்கையாளர்களிடம் எங்களை பரிந்துரைக்கிறார்கள். நாங்கள் புதிது புதிதாக சந்தைக்கு வரும் எங்களது துறைசார்ந்த பொருள்களில் முதலீடு செய்வதை பழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஒருமுறை முதலீடு செய்தால் அந்த பொருளின் தரத்தை பொறுத்து இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கு அந்த பொருளிலிருந்து லாபத்தை சம்பாதித்துவிட முடியும். எனவே புதுப்புது பொருட்களை தேடிக் கொண்டே இருப்போம். இதைவிட சிறப்பாக அடுத்த முறை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நிகழ்ச்சி முடிக்கும் போதும் என்னுடைய மனதில் தோன்றுவதுண்டு. சென்னை முழுவதும் நாங்கள் எங்களது சேவை இப்போது செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதை தமிழகம் முழுவதும் மாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோளாக இருக்கிறது.  ஒரு மாதத்திற்கு 10 முதல் 15 நிகழ்ச்சிகள் வரை செய்து விடுவோம். எம் என் சி நிறுவனங்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் விளையாட்டுகள் ஆண்டு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் எங்களிடம் பெரும்பாலும் வருகின்றது.


பத்தாயிரம் ரூபாய் கொண்ட வாடிக்கையாளர் வந்தாலும் சரி ஒரு லட்சம் கொண்ட வாடிக்கையாளர் வந்தாலும் சரி எங்களுடைய சேவையை சிறப்பாக செய்து தர வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்கும். பிறகு அந்த 10000 ரூபாய் கொண்டுவந்த அந்த வாடிக்கையாளர் பத்து லட்சம் ரூபாய் அளவிற்கு நிகழ்ச்சி நடத்தும் வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்திய நிகழ்வுகளும் எங்கள் நிறுவனத்தில் உண்டு.


இந்த துறையில் தொழில் முனைவோர் ஆக வேண்டுமென்றால் அனுபவம் என்பது மிகவும் இன்றியமையாததாகும். எனது தந்தையின் தொழில் என்பதால் எனக்கு சிறுவயது முதலே இந்த தொழில் ஆர்வம் இருந்தது. எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது வேலை செய்து கொண்டுதான் இருந்தேன். ஆனால் அதிலிருந்து நுணுக்கங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் தான் கற்றுக்கொண்டேன். விடாமுயற்சி என்றும் வெற்றியை பரிசாகத் தரும் என்பதை உணர்ந்துள்ளேன். என்றார் திரு யுகேஷ் கிருஷ்ணா.